அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, December 13, 2014

கானல் நீராகும் செடியன் குளம் !? தேவை போர்க்கால நடவடிக்கை!

கானல் நீர் என்ற சொல்லுக்கு விளக்கம் பெற வேண்டிய நிலையில் அதிரையர்கள் இல்லை என்றாலும் அது நமது அஜாக்கிரதையால் செயல்முறை விளக்கமாகிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது இன்றைய செடியன்குளத்தின் நிலை.

செடியன் குளத்தின் அருமை பெருமைகளையும், அதன் இன்றியமையா தேவையையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம். சுமார் 3 ஆண்டுகளாக தண்ணிரின்றி வறண்டு காணப்பட்ட செடியன்குளம் இன்று அல்லாஹ்வின் அருளால் மனித முயற்சி இல்லாமலேயே மழை நீரால் நிரம்ப இருந்த நிலையில் ஆற்று நீரும் திருப்பி விடப்பட்டு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியது, இன்னும் மழை நீர் வந்து கொண்டுதான் இருக்கிறது, அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

ஒரு சில மாதங்கள் முன்புவரை செடியன்குளம் பாலைவனமாக காட்சியளித்த காலத்தில் அது ஆழப்படுத்தப்பட்டு தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ள நிலையில், டிஎம்சி கணக்கில் நமக்கு அளவிட முடியாவிட்டாலும் நீரின் அழுத்தம் ( Pressure ) எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த அழுத்தத்தை தாங்கும் நிலையில் அதன் வடிகால் பாதை இல்லை என்பதே நமது கவலை தோய்ந்த இந்த கட்டுரையின் நோக்கம்.

வலுவற்ற வடிகால் பாதையால் ஏற்கனவே கசியத் தொடங்கிவிட்ட செடியன்குளம் எந்த நேரத்திலும் உடைத்துக் கொண்டு பிலால் நகரை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது மேலும் தொடர் கசிவின் காரணமாகவும் செடியனின் தண்ணீர் கோடைக்கு முன்பே வற்றிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

பேரூராட்சியின் சார்பில் மணல் மற்றும் மூடைகளை கொண்டு செப்பனிட முயன்றாலும் அவை பயன்தராத நிலையிலேயே உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் சற்று கூடுதலாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் நீர் பிலால் நகர் பகுதியின் பிரதான சாலை வழியே செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்கு தொழுகைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் இப்பகுதியினர் பெரும் அச்சத்ததில் உள்ளனர். தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் கொசு தொல்லை பெருகவும், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சம்பந்தபட்டவர்கள், தன்னார்வலர்கள், சங்க பொறுப்பாளர்கள் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் செடியனின் நீரை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உடன் முன்வர வேண்டும் என கோருகிறோம்.

வடிகால் கிணற்றை தோண்டி சிமெண்ட் கலவைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும் மேலும் வழியும் தண்ணீர் எத்தகைய தடங்கலுமின்றி செய்னாங்குளத்திற்கு சென்றடையும் வகையில் வாய்க்கால் சரிப்படுத்தப்பட வேண்டும் மேலும் ஊதாங்குழல் சைஸூக்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் உடைப்புக்கள் மற்றும் ஒழுகும் இணைப்புக்கள் சரிபடுத்தப்பட வேண்டும். மேலும் பிலால் நகர் பாதிக்காத வகையில் தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையெனில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அவல நிலைக்கு நாமே உதாரணமாகி விடுவோம் என எச்சரிக்கிறோம். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மேலத்தெரு, கீழத்தெரு பொறுப்பாளர்களை அழைக்கிறோம். செய்வீர்களா ? அல்லது செடியன்குளம் என்பது கானல் நீராகுமா ?

அதிரை நியூஸ் குழு

குளத்திலிருந்து கசிந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

பிலால்நகர் குடியிருப்பின் வழியாக வழிந்தோடும் காட்சி...

No comments: