அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Thursday, December 11, 2014

[ 3 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!



கடந்த வாரம் வெளியான இந்தக் கட்டுரைத் தொடரில் கருத்துரை தந்த சாகுல் ஹமீது என்ற சகோதரர் அகிலம் முழுதும் அறிய வேண்டிய செய்திகளை அதிரைக்கு மட்டும் தெரிவிப்பது பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். அவரது அன்பான கருத்தை வரவேற்கிறோம். அதே நேரம் இந்தத்தொடர் ஒரு முதல் கல்லை எடுத்து வீசும் முயற்சிதான். எம்மால் இயன்றதைத்தான் நாம் செய்து இருக்கிறோம்.  இதன்பின் இதைத் தமிழில் கையேடாக வெளியிட்டு நம்மால் இயன்றவரை இதைப் பரப்ப முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். 

அதே நேரம் , எந்த ஒரு முயற்சியின் பின்னணியிலும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பது இயல்பு.  அதேபோல் சமூக அக்கறை எழுதும் எங்களுக்கு மட்டும் உரிய தனிச்சொத்தல்ல.  இந்தக் கட்டுரைத் தொடரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அச்சிட்டு விநியோகிக்க  அல்லாஹ் நமக்கு அறிவை மட்டுமே தந்துள்ளான். ஆனால் அச்சிட்டு வெளியிட மற்றும் தேவைகளுக்கு வாய்ப்புள்ளோர் பங்கும் பொறுப்பும் ஏற்றுக் கொண்டால் இந்த செய்திகள் பலரிடமும் சென்று சேரும். இதற்காக சகோதரர்கள் தாமாக முன்வரவேண்டும். அவ்விதம் இம்முயற்சியில் பங்கேற்க  நினைப்பவர்கள் அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம். 


இப்போது தொடருக்குள் செல்லலாம்... 
காவிரிப் படுகையிலிருந்து மீத்தேன் எரிவாயு எடுத்து நாட்டின் மின்சாரம் தொழில் வளர்ச்சி முதலிய தேவைகளுக்குப் பயன்படுத்துவதில்  குற்றமென்ன கண்டீர் என்று இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்திடுவோர் எடுத்து வைக்கும் சில வாதங்களை கடந்த வாரம் கண்டோம்.


அவர்கள் சொல்லும் அனைத்துமே உண்மைகள்தான். மீத்தேன் வாயு என்பது பயன் தரும் ஓர் படைப்புத்தான். ஆனால் அந்தப் பயனைப் பெற  இன்றைக்கு எண்ணற்ற பேருக்கு காலங்காலமாக  வாழ்வு  அளித்துக் கொண்டிருக்கும் காவிரிப் படுகை எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துப் பலியிட்டால்தான் அது நடக்கும். ஒரே ஒருநாள் உலகம் கொள்ளும் பேராசைக்காக இந்த காவிரிப் படுக்கை எனும் பொன்வாத்தைப் பலியிடத்தான் வேண்டுமா? என்பதே அவர்களின் வாதத்திற்கான நமது சுருக்கமான பதில்.

மீத்தேன் வாயு எடுப்பதனால் ஏற்படும் நன்மைகளுக்கான பதிலை சுருக்கமாக ஒரு உதாரணத்தால் சுட்டிக் காட்டிய நாம்,  அதனால் ஏற்படும் பாதிப்புகளை கீழ்க்கண்டபடி விளக்கமான அறிவியல் ரீதியான விபரங்கள்  அடங்கிய பட்டியலின்றித் தர இயலாது. கீழ்க்கண்ட காரணங்களைப்  படிக்கும் எல்லோரும் சற்று நேரம் உங்களின் மனங்களைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரம்  சற்று நேரம் உங்கள் கவனங்களை கடனாகக் கொடுங்கள். 

பேரழிவுகளின் பட்டியல்... 
1. இறைக்கப்படும் நீரின் உயிர் கொல்லித்தனம் :-
நிலக்கரிப் படுகையிலிருந்து தொடர்ந்து நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்ற வேண்டும். இப்படி வெளியேற்றப்படும் நீர் ஏர்வாடிப் பகுதி பதநீர் போல இனிமையாக இருக்காது. அந்த நீரில் வேதிப் பொருள்களும் கனமான உலோகத்துளிகளும் ( Carcinogenic Hydro Carbons such as Benzene, Toluene, Ethyl, Arsenic, Cadmium, Lead and Mercury ) கலக்கின்றன.    மீத்தேன் வாயு , நிலத்தடி நீரியக்க உடைப்பு ( Hydraulic Fracturing)  மூலம் எடுக்கப்படுவதால் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் ஊர்ந்து,  கலந்து,  பரவி,  விரவி உடல்நல- உயிர்நலக் கேடுகளை விளைவிக்கிறது.


2.  கழிவு நீர்  அகற்றலினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு :-
ஒவ்வொரு ஆழ்துளை மீத்தேன் வாயு எடுக்கும் குழாயிலிருந்து ஏராளமான நிலத்தடிக் கழிவு நீரை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. இவ்விதம் வெளியேற்றப்படும் நீர், நீண்ட நெடுங்காலம் நிலத்துக்குள் ஆழமாக அடைபட்டுக் கிடப்பதால் அந்த நீரில்   நஞ்சு கலந்து இருக்கிறது. இவ்விதம் வெளிப்படும் நச்சு நீர் அருகிலிருக்கும் நீர் நிலைகளிலும் , கால்வாய்களிலும், கடலோர முகத்துவாரங்களிலும், கடல்களிலும் சுத்திகரிக்கபடாமலேயே விடப்படுகிறது. இதனால் ஊற்று நீரும்,  ஆற்று நீரும்,  கடல் நீரும் மாசு படுகின்றன. இந்த நீரின் மீது காற்று ஜலக்கிரீடை நடத்தும்போது நாம் சுவாசிக்கும் காற்றும் மாசு படுகிறது.


3. நிலத்தடி நீரின் கீழிறக்கம் மற்றும் சரிவு :-
விடாது தொடர்ந்து இறைக்கப்பட்டு வெளியேற்றப்படும்  நிலத்தடி நீரின் கணக்கிட முடியாத அளவால் சுற்றியுள்ள பகுதிளில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கும் பாசன மற்றும் குடிநீர் அளவின்  மட்டமும் பெரிதும் குறைகிறது. இவ்வளவு அதிகமான தண்ணீர் இறைக்கபடுவதால் நிலத்துக்குள் நீரோட்டம் தடைபடுகிறது. நீரின் கொள்ளளவை குறைக்கிறது. மேலும் நீர் வெளிஎர்ரபடும் பகுதி கடலுக்கு அருகில் இருந்தால் கடலின் உப்புநீர் காலியான இடத்தை ஆக்ரமிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்கிற பழமொழி கூட பொய்யாகி நாம் குடிப்பதற்கே உப்புத் தண்ணீர்தான் கிடைக்கும். 


4. காற்று மாசடைதல் மற்றும் வெடித்து எரியும் தீயின் பாதிப்பகள் :-
மீத்தன் வாயு எடுக்கப்படும் கிணற்றுப் பகுதிகளிலிருந்து நீரியல் கரிமங்கள் (Hydro Carbons) மீத்தேன், நீரியல் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்தாள் இந்தப் பகுதிகளில் ஓசை மாசுபடல் (Noise Pollution) மற்றும் சுற்றுப் புறக் காற்று மாசடைதல் ஆகியன நிகழ்கின்றன. ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளிலிருந்து வெளியிடப்படும் வேண்டாத நிலத்தடி எரிவாயுக்கள் வெடித்து எரிந்தால் ஒளி மாசுபடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நச்சுக் காற்று வெளியேறி நாட்டில் படர்கின்றன; பரவுகின்றன; பதிப்புகளை ஏற்படுத்துகின்றன.


5. நிலத்தடி நீர் தாங்கிகளுக்குள் மீத்தேன் வாயு பிளந்து உட்புகுதல் :- 
நிலக்கரிப் படுகையிலிருந்து குழாய்கள் மூலம் எடுத்துவரப்படும் மீத்தேன் வாயுக் குழாய்களில் பிளவுகள் ஏற்பட்டு நிலத்தடி நீர் தாங்கிகள் ஓடைகள் மற்றும் குடிநீர் கிணறுகளையும் பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன. மீத்தேன் வாயு கரியமில வாயுவை ( Carbon dioxide)  விட நூறு மடங்கு பசுமை வாயுக்களை தீமையுடையதாக மாற்றுகின்றது. சூடான தேநீரைக் கூட ஊதிக் குடிக்கும்போது அது மாசடைந்துவிடுகிறது என்பது  அடிப்படை அறிவியல் . காரணம் நம்மிடமிருந்து வெளியேறும் கரியமில வாயு. அப்படி இருக்க  டன் கணக்கில் வெளியேறும் கரியமில வாயு என்னவெல்லாம் செய்யுமென்று கற்பனை செய்து பாருங்கள். 


6. மீத்தேன் கிணறுகளிலிருந்து  ஏற்படும் கசிவால் ஏற்படும்  பாதிப்புகள்:-
அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி சராசரியாக 6% மீத்தேன் கிணறுகள் உடனடியாகவும் 50% மீத்தேன் கிணறுகள் 15 ஆண்டுகளுக்குள்ளும் வாயு கசிவு அல்லது ஒழுகலை ஏற்படுத்துகின்றன. பல ஆயிரக் கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது அவற்றின் சுத்திகரிக்கப்படாத  மீத்தேன் வாயுவின் கசிவு ஏற்படுத்தும் வேதியல் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. இத்தகைய கிணறுகளை மூடவோ மாற்று வழியில் பயன்படுத்தவோ இயலாது. ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இந்தக் கிணற்றின் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்  கட்டமைப்புகள் நிலத்துக்குள் புதைந்துவிடும். எனவே எல்லாக் கிணறுகளிலிருந்தும் கசியும் மீத்தேன் வாயு வெளிக்காற்றை மாசடையச் செய்யும்.


7. நிலப்பரப்பும் சுற்றியுள்ள கட்டமைப்புகளும் பாதிப்படைதல் :-
மீத்தேன் வாயுவை தொடர்ந்து எடுத்திட, நிலபரப்பு, மீத்தேனை அணுகும் பாதைகள், சாலைகள், அடித்தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. இத்தகைய கட்டமைப்புகளுக்கான முயற்சியும் அவற்றின் வளர்ச்சியும் பொதுவான நிலப் பரப்பையும் வயல் வெளிகளையும் அவற்றில் வளரும் நுண்ணுயிர்களையும்  பறிப்பதுடன் நமது இயல்பான போக்குவரத்துச்  சூழலையும் கெடுக்கின்றன; தடுக்கின்றன.


8.  வெளியேற்றும் குழாய்கள் ஏற்படுத்தும் மாற்றவியலாத அழிவுகள் :-
வயல்வெளிகளில் போடப்படும் கனத்த குழாய்கள்,  வயல்களில் நமது நடமாட்டத்துக்கு இடையூறாக மலைப் பாம்பாகப்  படுத்துக் கிடக்கிறது.  இவை இயற்கை எழிலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதிக்கின்றன. இவற்றிலும் கசிவுகள் ஏற்பட்டால் அடுத்துள்ள பயிர்கள் அப்போதே தற்கொலை செய்துகொள்ளும்.  கரும்பு விளையும் வயற்காட்டில் இரும்புதான் விளைந்து நிற்கும். நெல் விளையும் வயலில் கல்தான் விளையும் .


9. உயர்வழுத்த மின் நிலையங்களால் எந்திரமயமாகும் உள்ளூர் நிலப் பகுதிகள் :- 
ஆயிரக் கணக்கான ஆழ்துளைக் கிணறுகளை ஒன்றிணைத்து இயக்குவதற்கு பெரும் சப்தத்துடன் கூடிய மின் சாதனங்கள்  தேவை.  அத்துடன், மீத்தேன் வாயுவை வெளியில் எடுக்கும் பொது அதன் தோழிகளான தேவையற்ற வாயுக்களும் வெளிப்படும் . அவற்றை வெளியாகும் நிலையிலேயே எரிக்க வேண்டும். அதற்காகவும் நிறைய இயந்திரங்களும் தேவைப்படும். அவை இயங்கும்போது எழுப்பும் சப்தங்கள் சுற்றுச் சூழலைப் பாதிக்கும். ஒலி- ஒளி மாசுபடும். காற்று மண்டலத்தில் எரிக்கப்படும்  வாயுக்களின் சாம்பல் படர்ந்து விலை நிலங்கள் பசுமைத்தன்மை இழந்து சாம்பலாகிப் பின் பொட்டைக்காடாக மாறி அரிதாரம் பூசிக் கொள்ளும்.


10. வளரும் சமுதாயம் வதைக்கப்படும் :- 
வன விலங்குகளின் பாதைகள் திசை மாற்றப்படும். இன்று அன்றாடம் நாம் செய்திகளில் காணும் யானைக் கூட்டங்கள் வயல்களை அழித்தன; சிறுத்தை ஊருக்குள் புகுந்தது என்கிற செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகிப் போகும். சமுதாயத்துக்குள் அமைதி அஸ்தமனமாகும். பயிர் செய்யும் நிலங்களில் பெரும் பகுதி, மீத்தேன்  கிணறுகளை அமைக்கவே பயன்படுத்தப்படுவதால் விவசாய விலை பொருள் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் விளையும் சொற்ப விளை பொருள்களுடைய  விலை ஏறும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக திணறும்; திண்டாடும்.


இவை மட்டும்தானா ? இன்னும் இருக்கின்றன ஏராளம். அந்த ஏராளத்தில் அழிவுகளும் அமைதியின்மையும்தான் தாராளம்.   

இன்ஷா அல்லாஹ் விவாதிக்கலாம்.

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill

எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,
ஆய்வு தொடரும்...  

குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 


பகுதி I வாசிக்க:

No comments: