அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, December 21, 2014

'மக்களின் பாரத ரத்னா' திரு. ஜாதவ் பயேங்




அது என்னப்பா பாரத ரத்னா உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் எல்லாம் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா..? இந்தியாவில் பெரும்பான்மை சமூகமான விவசாயிகளுக்கு எத்தனை பேருக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் நிச்சயம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.. 

கடந்த 2013 ஆண்டு இதே விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டது . அவர் ஒரு விளையாட்டு பிரபலம்.. இந்த துறையில் 25 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். அதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் இந்த சாதனைக்காக அவர் ஊதியமாக பல நூறு கோடிகளை விளையாடும் காலத்திலேயே பெற்றுவிட்டார். பரிசுகளாக பல கோடி மதிப்புள்ள பெராரி கார் வரை இலவசமாக பெற்றுவிட்டார். அதுவும் வரி செலுத்தாமலே .இருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னாவும் அவரை அலங்கரித்தது. 

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு நபர் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி கட்டியுள்ளார்.. நாம் வாழும் காலத்தில். ஆனால் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியும் கூட அவருக்கு கோடிகளும் குவியவில்லை . சிறந்த இந்திய குடிமகன் என்று அரசின் உயர் விருதுகளாலும் இல்லை.. ஊடகங்களிலும் தொடர்சியான பாராட்டுக்களும் இல்லை.. மாறாக அவர் நிகழ்த்திய சாதனை மட்டும் என்றும் அழியாத புகழோடு இருக்கும் என்பது மட்டும் உண்மை. அவரது பெயர் ஜாதவ் பயேங் இவர் கிடத்தட்ட தனது வாழ்நாளின் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காட்டை உருவாக்கவே செலவிட்டு அதில் சாதித்தும் கட்டியுள்ளார். நாட்டின் வன வளங்களை அழிக்கும் இன்றைய காலட்டத்தில் இதை சாதித்துள்ளார். அதுவும் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் காடுகளை தனி ஒரு மனிதராக யார் உதவியும் இன்றி எந்த ஒரு ஊதியமும் இன்றிருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருது அவருக்கு இல்லை. மாறாக எதாவது ஒரு அரசியல்வாதிக்கு அல்லது சினிமா பிரபலங்களுக்கு இந்த விருதை கொடுப்பது பற்றி தான் இன்று வரை சிந்தித்து வருகிறது நமது அரசுகள். ஏன் இப்படியான நிலை .. ஒருவேளை அவர் ஏழை என்பதால், ஊடகங்களால் புகழ்ச்சிகள் இல்லை என்பதால் நம் நாட்டின் உயரிய விருதுகள் கொடுக்கப்படவில்லையோ .. அவரை பற்றிய ஒரு சிறிய குறிப்பு..

சாதனை மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது… எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!

யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரபட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.

மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16
! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம், முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்… ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்…ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார்.

இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்… வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்…இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர்.

அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார்” என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும், 30,000 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன…!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த ‘முலாய் காடுகள்’ !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது…இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்…ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை…இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது...

இவரை போன்ற எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்தின், இயற்கையின் மீது அக்கறை கொண்ட நல்லுங்கள் தான் நம் நாட்டின் உயரிய சொத்துக்கள் .. ஆனால் ஏனோ நமது அரசுகளுக்கு இவர் செய்த சாதனைகள், தியாகங்கள் எல்லாம் கண்களில் தெரியவில்லை போலும்.. எது எப்படியோ இவரின் சாதனை இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் இவரது இந்த சாதனை எக்காலத்திலும் அழியாத ஒன்று என்றால் மிகையில்லை..

Thanks to:

Friday, December 19, 2014

[ 4 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!


கடந்த வாரம் நாம் எழுதிய  மீத்தேன் வாயுத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படும் பேரழிவுகளின் பட்டியலைப் படித்தவர்களுக்கு  அந்தத் திட்டம் ஒரு புதையல் அல்ல; புதைகுழி என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம்.

அழிவுப் பட்டியலில் இன்னும் இருக்கின்றன ஏராளம். அந்த ஏராளத்தில் அழிவுகளும் அமைதியின்மையும்தான் தாராளம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இதோ அவைகளின் மிச்சமும் சொச்சமும்.

நிலச் சரிவுகளும் நிலதடியுள் நிகழும் நிலக்கரி எரிப்புகளும்:-

நிலத்தடி நீரைத்  தொடர்ந்து இறைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அளவற்ற அளவில் கீழிறங்குகிறது என்று பார்த்தோம். அப்படி நீர் கீழிறங்கி காலி செய்யும் இடத்தை,  நிலத்தின் மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமிக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை. காவிரிப் படுகை என்பது காட்டுக் கருவை வளர்ந்துள்ள கட்டாந்தரையல்ல.  தமிழகத்தின் கலாச்சார கேந்திரம். தஞ்சையின் பெரிய கோயில் முதல் கும்பகோணத்தின் கோணங்கள் தோறும் தோன்றும் கோபுரங்கள் வரை நாச்சியார் கோயில் என்றும் உப்பிலியப்பன் கோயிலென்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரமென்றும் வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் உட்பட பலவேறு சமயங்களின் அடையாளங்களும் கலாச்சார சின்னங்களும் நீண்டகாலமாக நின்று நிலவும் நிலம். இவையாவும் புதையுண்டு போகிற வாய்ப்புகளை சுட்டிக் காட்டி அறிவியலார் அறிவுறுத்துகிறார்கள்.

அதோடு கூடவே, நிலத்தின்  அடியில் படுகையாகப் படுத்திருப்பது வாழைத்தண்டு அல்ல; நிலக்கரி. இந்த நிலக்கரி நிலத்தின் அடியிலேயே பற்றி எரியும் ஆபத்தும் இருக்கிறது.


தொழிற்சாலைகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும்  ஏற்படும் பாதிப்புகள் :-

புதிதாக ஆயிரக் கணக்கான மீத்தேன் கிணறுகள் தோண்டப்படுவதால் , அவ்வாறு தோண்டப்படும் இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளும் அவற்றில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். குறுகியகாலப் பேராசைக்காக பல்லாண்டுகளாக இயங்கிவரும் தொழிற்சாலைகளை மூடவேண்டியும் அதனால் பலர் வேலை இழக்கும் சூழல்களும் ஏற்படும். குறிப்பிட்ட வட்டாரத்தின் வளர்ச்சி,  தளர்ச்சியாகி பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை இழந்து நிற்கும் குடும்பங்கள் மீத்தேன் வாயுவைக் குடித்து பசியைத் தீர்த்துக் கொள்ள இயலாது; வெளியேறும் நீரும், தாகம் தீர்க்காது. 
கனரக வாகனங்களின் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் :-

ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வெளியேற்றப்படும் எதிலும் சேராத சேறு, சக்தி இல்லாத  சகதி மற்றும் பிற கழிவுகளை அப்புறப்படுத்த கனரக வாகனங்கள் பல அந்தப் பகுதிகளில் அடிக்கடிப் பயணிக்கும். இவற்றைத் தவிர கட்டுமான இயந்திரங்களும் துளையிடும் கருவிகளும் வருவதும் போவதுமாக சாலைகளை வறுத்து எடுக்கும்.  மணல் லாரிகள் மற்றும்  உள்ளூராட்சிக் குப்பை அள்ளும் வண்டிகளின் போக்குவரத்தையே தாங்காமல் தடுமாறும் நமது கிராமப்புற சாலைகள் பெரும் சேதத்துக்குள்ளாகும். இதனால் நிலச் சரிவும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பில் வீழ்ச்சி:- 

மீத்தேன் வாயு எடுக்கப்படும் வட்டாரங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை விரும்பி வாங்குவோர் இல்லாமையால் அவற்றின் விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். சிறிய சிறிய தொகைகளாக சிறுவாடு சேர்த்து வாங்கிப் போட்ட நிலங்களின் விலை  வீழ்ச்சியால்  நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாகிவிட வாய்ப்பு ஏற்படும்.
புதுப்பிக்கப்படும் ஆற்றலின் மீது குறையும் முதலீடுகள்  :-

நிலக்கரிப் படுக்கை மீத்தேன் வாயு,  மற்ற எரிபொருள்களின் ஆற்றல் திறனைக் குறைக்கிறது. இதனால் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை உருவாக்கும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளின் மீது ஆர்வம் குன்றுகிறது.
                   ( Courtesy: Impacts of Coal bed Methane in UK from Google. ) 
2003 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் , மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தான் , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம்  13600 சதுர கிலோ மீட்டரில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் அனுமதி வழங்கின. மேலே குறிப்பிட்ட அந்த மாநிலங்களில் மீத்தேன் எடுக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தஞ்சை காவிரிப் படுகை போல முப்போகம் விளையும் -  பொன் விளையும் பூமி அல்ல. அவை மலையோரங்களில்  வறண்ட பாறைகள் மிகுந்த பகுதிகளாகும். அடித்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத அநாதைகளே இந்தப் பகுதிகள்.
ஆனாலும் இப்படி பயனற்ற பகுதிகளில்  மீத்தேன் எடுப்பதற்கே அந்தந்தப் பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேறு எந்தத் தொழிலுக்கும் இலாயக்கு இல்லாத நிலங்களில் வசிப்போர்களே இந்தக் கொடிய திட்டத்தை எதிர்த்தார்கள் என்றால் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியின் மக்கள் செய்ய வேண்டியது என்ன ?

இந்தியாவில் நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து,  உலக அளவிலும் பல பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கிறார்கள். அங்கெல்லாம் என்ன நிலைமை?


கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, தெற்கு ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா ,  சீனா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு , மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும்    (Elk Valley in Vancouver Island) கனடாவில் , அல்பேர்டா, அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கொலராடோ மாநிலத்திலும் ( Raton, Basin, Bon, Carbo, San Swan Basin,) மொன்டானா, வையோமிங்க், நியூ மெக்சிகோ, அலபாமா, பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினியா, பிளாரிடா போன்ற மாநிலங்களிலும் (   Powder River Basin, Billings, Tallahassee, Bozeman, Black Warrier Basin) ஆஸ்திரேலியாவில்  Sidney Basin, Moreton Basin, Surat & Bower Basin , Galilee and  Gunnedah Basins  ஆகிய பகுதிகளிலும்  மீத்தேன் வாயுவை எடுத்து வருகிறார்கள்.  அந்தப் பகுதிகள் நாம் பட்டியலிட்ட விளைவுகளைக் கண்கூடாகப் பார்த்து அல்ல அனுபவித்து வருகின்றன.


ஆனால் இந்த நாடுகளிலும் பகுதிகளிலும் கூட, மீத்தேன் எடுக்கும் கிணறுகள் பெரும்பாலும் மக்கள் வசிக்காத - விவசாயம் பண்ணாத-  பாசன வயல்கள் இல்லாத - வறண்டுபோய் எதற்கும் பயனற்ற மலைப்பிரதேசம்  போன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அங்கெல்லாம் உணரப் படவில்லை.


இருந்தாலும், இந்த நாடுகளில் இருக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் மக்கள் நல ஆர்வலர்களும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக    “Lock the Gate”  என்று முழக்கமிட்டும் பதாகைகள் தாங்கியும் போராடி வருகிறார்கள். அந்தந்த  நாடுகளில் உள்ள  Clean Water Act, Safe Drinking Water Act, Water Quality Act, Environmental Policy Act, Federal Lands Policy and Management Act, National Historic Preservation Act போன்ற சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் நூற்றுக் கணக்கான வழக்குகளைப் போட்டு இந்தத் திட்டத்தின் விளைவுகளை அம்பலப் படுத்தி பல தடையாணைகளையும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள   நிறுவனங்களின் மீது பல கட்டுப் பாடுகளையும் பெற்றுள்ளனர். 


தமிழ்நாட்டின் தஞ்சையிலோ இந்தத் திட்டம் நடு வீட்டில் படுத்துக் கிடக்கும் நாகப் பாம்பு. கட்டிலில் படுத்துக் கிடக்கும் கண்ணாடி விரியன். வரவேற்பறையில் வாயைப் பிளந்துகொண்டு நிற்கும் ஓநாய். இந்தத் திட்டத்தை அடித்து ஒழித்து பால் ஊற்றிப் புதைக்க வேண்டும். இல்லையேல் நாமும் நமது வளமும் புதைந்து போகும். 


இப்போது நமக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் , காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான சோதனைகளை நிறுத்த வேண்டுமென்று மறைந்த வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழ்வார் தலைமையில் எழுந்த மக்கள் எழுச்சியாலும்,  தொடர்ந்த போராட்டங்களாலும் அன்றைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா தமிழ்நாட்டில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தற்காலிகத்  தடை விதித்தார்.


அத்துடன் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆய்ந்து அறிக்கை தருமாறு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் சென்னைப் பிரிவு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் , தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிகளும் இடம் பெற்று இருக்கிறார்கள். இன்று காவிரிப் படுகையின் தலைவிதி இந்தக் குழுவின் கரங்களில் இருக்கிறது. இன்று நாம் அமைதி காக்கலாம். காரணம் , இன்று இந்தப் பிரச்னை, இப்படி ஒரு குழுவை நியமித்ததன் மூலம்  ஆறப் போடப்பட்டு இருக்கிறது.  ஆனால் இந்தக் குழுவின் அறிக்கை மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஆதரவாக அமைந்துவிட்டால் தஞ்சையின் மக்களுக்குத் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியே இருக்காது. காரணம், “ சிரம் அறுத்தல் வேந்தருக்கு  பொழுது போக்கும் இனிய கதை ; ஆனால் நமக்கோ அதெல்லாம்  உயிரின் வாதை. “


மேலும் Great Eastern Energy Corporation Ltd.,  (GEECL)      நிறுவனத்துடன் அரசுகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்          (MOM)  எதிர் வரும் 31/12/ 2014 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், இந்த வருடத்துடன் முடித்துவைத்து தஞ்சை மண்ணைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டுமென்றே மண்ணின் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்றைய தமிழக அரசு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமானால் ,  பச்சைப்பசேலென்று படைக்கப்பட்ட நிலத்தை பாலைவனமாக்கும் பச்சை துரோகம் வேறு இருக்கவே இருக்காது.


இன்றைக்கு மின் பற்றாக்குறை நிலவுகிறதே !


மீத்தேன் வாயுத் திட்டத்தையும் எதிர்க்கிறீர்களே ! 


குறைந்த வெப்பத்திலேயே எரியும் சக்தி படைத்த மீத்தேனுக்கு இவ்வளவு எதிர்ப்புக் கிளம்புகிறதே !  


இதற்கு மாற்றுத் திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா ? என்று கேட்பது நமது காதுகளில் விழுகிறது. அதுபற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.

ஆய்வு தொடரும்...  !
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு 1: அன்பான சகோதரர்களுக்கு, தங்களுக்கு நேரமிருந்தால், கீழ்கண்ட இணைப்பில் உள்ள கோரிக்கையை அதாவது 'தமிழக அரசு செய்துகொண்ட மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம்' எதிர்வரும் [ 04-01-2015 ] அன்றுடன் நிறைவு பெறுகிறது. இவற்றை புதுப்பிக்க வேண்டாம் என வலியுறுத்தி  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://docs.google.com/document/d/15ajykYtHr_wZOEZfJ42jzGomJ4ct8Nl04hyXzrslYOQ/edit
https://docs.google.com/document/d/1X_y-Gj3ky-XzIux-VtDACBMRd69dl30rYrhJcjszZ00/edit

குறிப்பு 2 : பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

Saturday, December 13, 2014

பசுமையான அதிரையின் அசத்தலான படங்கள்!

அதிரையில் சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பல மடங்கு அதிகமாக மழை பெய்தது. இதனால் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் வயலும், தோப்புகளும், நீர் நிலைகளும் பசுமையாக செழிப்படைந்துள்ளன.

அதன் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...















கானல் நீராகும் செடியன் குளம் !? தேவை போர்க்கால நடவடிக்கை!

கானல் நீர் என்ற சொல்லுக்கு விளக்கம் பெற வேண்டிய நிலையில் அதிரையர்கள் இல்லை என்றாலும் அது நமது அஜாக்கிரதையால் செயல்முறை விளக்கமாகிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது இன்றைய செடியன்குளத்தின் நிலை.

செடியன் குளத்தின் அருமை பெருமைகளையும், அதன் இன்றியமையா தேவையையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம். சுமார் 3 ஆண்டுகளாக தண்ணிரின்றி வறண்டு காணப்பட்ட செடியன்குளம் இன்று அல்லாஹ்வின் அருளால் மனித முயற்சி இல்லாமலேயே மழை நீரால் நிரம்ப இருந்த நிலையில் ஆற்று நீரும் திருப்பி விடப்பட்டு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியது, இன்னும் மழை நீர் வந்து கொண்டுதான் இருக்கிறது, அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

ஒரு சில மாதங்கள் முன்புவரை செடியன்குளம் பாலைவனமாக காட்சியளித்த காலத்தில் அது ஆழப்படுத்தப்பட்டு தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ள நிலையில், டிஎம்சி கணக்கில் நமக்கு அளவிட முடியாவிட்டாலும் நீரின் அழுத்தம் ( Pressure ) எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த அழுத்தத்தை தாங்கும் நிலையில் அதன் வடிகால் பாதை இல்லை என்பதே நமது கவலை தோய்ந்த இந்த கட்டுரையின் நோக்கம்.

வலுவற்ற வடிகால் பாதையால் ஏற்கனவே கசியத் தொடங்கிவிட்ட செடியன்குளம் எந்த நேரத்திலும் உடைத்துக் கொண்டு பிலால் நகரை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது மேலும் தொடர் கசிவின் காரணமாகவும் செடியனின் தண்ணீர் கோடைக்கு முன்பே வற்றிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

பேரூராட்சியின் சார்பில் மணல் மற்றும் மூடைகளை கொண்டு செப்பனிட முயன்றாலும் அவை பயன்தராத நிலையிலேயே உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் சற்று கூடுதலாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் நீர் பிலால் நகர் பகுதியின் பிரதான சாலை வழியே செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்கு தொழுகைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் இப்பகுதியினர் பெரும் அச்சத்ததில் உள்ளனர். தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் கொசு தொல்லை பெருகவும், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சம்பந்தபட்டவர்கள், தன்னார்வலர்கள், சங்க பொறுப்பாளர்கள் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் செடியனின் நீரை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உடன் முன்வர வேண்டும் என கோருகிறோம்.

வடிகால் கிணற்றை தோண்டி சிமெண்ட் கலவைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும் மேலும் வழியும் தண்ணீர் எத்தகைய தடங்கலுமின்றி செய்னாங்குளத்திற்கு சென்றடையும் வகையில் வாய்க்கால் சரிப்படுத்தப்பட வேண்டும் மேலும் ஊதாங்குழல் சைஸூக்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் உடைப்புக்கள் மற்றும் ஒழுகும் இணைப்புக்கள் சரிபடுத்தப்பட வேண்டும். மேலும் பிலால் நகர் பாதிக்காத வகையில் தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையெனில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அவல நிலைக்கு நாமே உதாரணமாகி விடுவோம் என எச்சரிக்கிறோம். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மேலத்தெரு, கீழத்தெரு பொறுப்பாளர்களை அழைக்கிறோம். செய்வீர்களா ? அல்லது செடியன்குளம் என்பது கானல் நீராகுமா ?

அதிரை நியூஸ் குழு

குளத்திலிருந்து கசிந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

பிலால்நகர் குடியிருப்பின் வழியாக வழிந்தோடும் காட்சி...