அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, February 3, 2015

இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்: சிறப்பு நேர்காணல் : முதல் பாகம்


கேள்வி: தங்களது படிப்பு மற்றும் பூர்வீகம் பற்றி கூறுங்கள்?
  
பதில்: என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேசபுரம். நான் பல ஊர்களில் படித்திருக்கிறேன். நான் எம்.ஏ. சமூகவியல் முதுகலை பின் இதழியல் பட்டயப்படிப்பு முடித்திருக்கிறேன். அதன் பிறகு நான் செய்த வேலைக்கும் படித்ததற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இப்பொழுது நான் முழுமையாக இயற்கை வேளாண்மை குறித்த வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.
  
கேள்வி: இயற்கை வேளாண்மையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு எப்படி வந்தது?

பதில்: நான் அடிப்படையில் சூழலியல் தொடர்பான இயக்கங்களில் ஈடுபட்டிருந்தேன் படித்து முடித்து விட்டு பணி செய்திருக்கும் காலத்தில். குறிப்பாக எனக்கு ஆர்வம் எழுத்தின் மேல் இருந்தது. அந்த காலகட்டத்தில் சென்னையில் நெடுஞ்செழியன் என்கிற நண்பர் மிக ஆர்வமான சூழலியல் தொடர்பான ஒரு வங்கி அதிகாரி. சூழலியல் தொடர்பான சிறு நூல்கள், இயக்கங்கள் எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். அப்படித்தான் சூழலியல் தொடர்பான அக்கறை வந்த பிறகு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் இயக்கங்களில் ஈடுபடும் பொழுது எங்களுக்கு என்ன தெரிந்தது என்றால் இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு அடிப்படைக் காரணம் நம் வாழ்வியல் முறையே மாறிப்போனதுதான் என்று புரிந்துகொண்டோம். அதன் அடிப்படையில் எங்கிருந்து தொடங்குவது என்று பார்க்கும் பொழுது வேளாண்மையிலிருந்து தொடங்கினால்தான் இதற்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் என்று முடிவு செய்தோம்.

அந்த அடிப்படையில்தான் வேளாண்மை தொடர்பாக வேலை செய்யலாம் என்று பத்து நண்பர்கள் சேர்ந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள். ஒருவர் பொறியியல் துறையில் இருந்து வந்தார், என்னைப் போன்றவர்கள் இதழியல் துறையில் இருந்து வந்தோம், சில உழவர்களே நேரடியாக பங்கெடுத்தார்கள், சிலர் இடது சாரி இயக்கத்திலிருந்து வந்தவர்கள். இப்படி பலதரப்பட்ட நண்பர்கள் இணைந்து தொடங்கினோம். தொடங்கும்பொழுது அந்தகாலகட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பெரிய விழிப்புணர்வு கிடையாது. அதற்கான பயிற்சிகள், வசதி வாய்ப்புகள் கிடையாது, பெரிய தொழில்நுட்பங்கள் வளராத காலம். அப்பொழுது இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் மசானபுஃகோகா, பில்மோலிசன் போன்ற முன்னோடிகளின் தொழில்நுட்பங்களை எடுத்து தமிழில் மொழிபெயர்த்து பின் நம் தமிழ்மக்களிடம் இருக்கக்கூடிய பாரம்பரிய உழவர்களிடம் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்களை எல்லாம் தேடி எடுத்து அதை முறைப்படுத்தி அதை பயிற்சி வடிவமாக மாற்றினோம்.

அதனடிப்படையில் இரண்டு நாள் பயிற்சியை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம் சத்தியமங்கலத்தில். இதனை சுந்தர்ராமன் என்ற இயற்கை உழவரின் பண்ணையில் ஆரம்பித்தோம். இரண்டு நாள் பயிற்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துகொண்டே இருந்தது. நாங்கள் அதை கட்டணம் வாங்கிதான் செய்ய ஆரம்பித்தோம். அப்படி இருந்தாலுமே உழவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். கலந்துகொண்ட உழவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள் பயிற்சி எடுக்கும் பொழுது நிறைய செய்திகள் கிடைக்கிறது ஆனால் ஊருக்குச் சென்று பண்ணையில் வேலை தொடங்கும் பொழுது மறந்துவிடுகிறது அதனால் இதனை அச்சு வடிவத்தில் நூலாகக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதனடிப்படையில் நாங்கள் 18 நூட்களை வெளியிட்டோம். அதன் பிறகு எங்களுடைய விவசாயிகளே நிறைய கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்ததை நாம் ஏன் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அந்த ஆர்வத்தின் காரணமாக நாங்கள் தாழாண்மை என்ற பத்திரிகையைத் தொடங்கினோம். அந்தப் பத்திரிகை 12 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது விளம்பரமே இல்லாத ஒரு இதழ். அதில் இயற்கை விவசாயியின் அனுபவங்கள், மாற்று வாழ்வியல், கட்டிடம் அது பற்றின செய்திகளைக் கொடுக்கிறோம்.

இதைத் தவிர இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபடக்கூடிய உழவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீர்கள் என்றால் நகர் முழுவதும் நல்ல விழிப்புணர்வு வந்திருக்கிறது. என்னவென்றால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்களை சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் இதற்கான ஒரு தேவை அதிகமாகியிருக்கிறது. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கான ஒரு பகுதியாக எங்களுடைய உழவர்களுடைய உற்பத்திப் பொருட்களை ஓரளவு நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறோம். இதுதவிர அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களுக்காகவும் தொடர்ந்து போராடுகிறோம், கருத்தரங்கு நடத்துகிறோம், அந்த கருத்தரங்கு மூலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வைக்கிறோம், பரிந்துரைகள் செய்கிறோம். இவையெல்லாம் செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுக்கிறோம். குறிப்பாக மரபணு மாற்ற விதைகள் என்று சொல்லக்கூடிய genitically modified seeds விதைகளை எதிர்த்து நடத்தக்கூடிய இயக்கங்களில் பங்கேற்கிறோம். அதைத்தொடர்ந்து உழவர் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறோம். இப்படித்தான் எங்களது வேலைகளை செய்து வருகிறோம்.
  
கேள்வி: மண்ணையும் பயிரையும் கெடுக்கின்ற ரசாயன உரத்திற்கு மாற்றாக இருக்கும் இயற்கை உரங்கள் எவை? அதன் பயன்பாடு என்ன?

பதில்: பொதுவாக உலகத்தில் எந்தத் தொழில் லாபகரமானது என்று பார்த்தீர்கள் என்றால் வேளாண்மை என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் அடிப்படையில் விவசாயிகள் ஏழைகளாக இருக்கின்றார்கள். இது ஒரு முரண்பாடு. ஒரு நெல் போட்டீர்கள் என்றால் ஆயிரம் நெல் வரும். ஆனால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை போட்டு நீங்கள் வெளியில் எடுத்தீர்கள் என்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக் வராது ஒரு கிலோவுக்கும் குறைவாகத்தான் வரும். ஆனால் ஒரு பிளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவன் லாபகரமாக தன்னுடைய பொருளுக்கு விலை வைக்கிறான். ஆனால் விவசாயி தான் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு விலை வைக்கமுடியாது. ஏனென்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்க்கைச்சூழல் என்பது அவர்களை ஒரு இக்கட்டான நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக உழவர்களுடைய சிக்கல்களை நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். முதலில் விவசாயிகள் தற்சார்பை இழந்துவிட்டார்கள். ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உழவர்களுடைய வாழ்க்கை என்பது தற்சார்பு உள்ள வாழ்க்கையாக இருந்தது. சந்தை நோக்கி உற்பத்தி பண்ண மாட்டார்கள். தன்னுடைய வீட்டிற்கு தன்னுடைய சுற்றத்திற்கு, தன்னுடைய ஊருக்கு அதற்குப் பிறகுதான் வெளியே அதனடிப்படையில் தற்சார்புள்ள சமூகமாக இந்த உழவர் சமுதாயம் இருந்தது. ஆனால் எப்பொழுது பசுமைப் புரட்சி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்பொழுது சந்தையை நோக்கி உற்பத்தி செய்ய வைத்தார்கள். அப்பொழுது சந்தைக்காக உற்பத்தி பண்ணுவது, சந்தை நோக்கி உற்பத்தி பண்ணுவது என்பது அவர்களுடைய தற்சார்வை இழக்க காரணமாகிவிட்டது. அதனால் அவர்கள் முதலில் விதைக்கும் இரசாயன உரங்களுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிறரை நம்பி இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்பாக பாரம்பரிய விதைகள் அல்லது மரபு விதைகள் என்பது வறட்சியைத் தாங்கியிருக்கும், நோய் எதிர்ப்பு கொண்டது. ஆனால் பின்னாளில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்திய விதைகளைப் பார்த்தீர்கள் என்றால் அதில் நோய் எதிர்ப்புத் திறன் இருக்காது, பூச்சி எதிர்ப்பு இருக்காது, வறட்சியைத் தாங்காது ஆனால் அதிகமான விளைச்சல் தரும் என்று சொன்னார்கள். ஆனால் நாட்டு ரகங்களில் பாரம்பரிய ரகங்களிலேயே இரண்டு வகை இருக்கிறது. அதிகமான விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், குறைவான விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், வறட்சியைத் தாங்கக்கூடிய ரகங்கள் என்று பல பிரிவுகள் உண்டு. ஆனால் இவர்கள் நமக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்றால் சோதா விதைகளை வீரிய விதைகள் என்று அறிமுகப்படுத்தினார்கள் இது ஒரு பக்கம், இந்த விதைகள் முழுக்க முழுக்க இரசாயன உரங்களை நம்பி, அதிகமான தண்ணீரை நம்பி இருக்கக்கூடிய விதைகளாக இருந்தது. இதன் விளைவாக ரசாயன உரங்களை கடைகளில் வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

முன்பு மாடு வைத்திருந்தார்கள் அந்த மாட்டில் இருந்து வரக்கூடிய சாணத்தை எடுத்து அதை உரமாக மாற்றி எருவாக மாற்றி அதைத் தொடர்ந்து பயன்படுத்தினார்கள். அதன் காரணமாக அவர்கள் வெளியிலிருந்து எந்த காசு கொடுத்தும் உரமோ எதுவோ வாங்கத் தேவையில்லை. ஆனால் ரசாயன உரங்கள் வாங்கவேண்டிய சூழல் வந்த பொழுது இவர்களுடைய வருமானம் முழுவதும் ரசாயன உரத்திற்கும், விதைக்கும், தொழில்நுட்பத்திற்கும் போக ஆரம்பித்தது. தொழில் நுட்பம் கூட பார்த்தீர்கள் என்றால் எந்த நோய் வந்தால் எந்த பூச்சி வந்தால் என்ன செய்யலாம் என்று மக்களிடம் இருந்த அறிவு, இப்பொழுது ஒரு சில அறிவியல் அறிஞர்களிடம் போய் மாட்டிக்கொண்டது. அதன் விளைவாகவும் அவர்கள் தற்சார்பை இழந்தார்கள். இரண்டாவது சிக்கல் பார்த்தீர்கள் என்றால் உழவர்களுடைய வாழ்க்கை என்பது ஓர் உதிரித் தன்மை கொண்டது. இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் ஆனால் அவர்ளைப் பிடித்து சிறையில் போட்டால் கூட பாதிக்கப்படுவது மாணவர்கள். மருத்துவர்கள் எல்லாரும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் பாதிக்கப்படுவது நோயாளிகள். ஆனால் ஒரு விவசாயி போராட்டத்தில் உழவர்களைப் பிடித்து சிறையில் வைக்கும் பொழுது அவர்களுடைய மாட்டுக்குத் தண்ணீர் வைக்க ஆள் இருக்கமாட்டார்கள், அவர்களுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச ஆள் இருக்க மாட்டார்கள். அப்பொழுது அவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது. அப்பொழுது சேர்ந்து போராடினால்தான் ஒரு ஜனநாயகத்தில் ஜெயிக்க முடியும். இப்பொழுது 51 பேர் சேர்ந்து 49 பேரை முட்டாள் என்று சொல்லலாம் அதுதான் ஜனநாயகம் என்று வேடிக்கையாக சொல்வார்கள். அதனடிப்படையில் இவர்கள் சேர்ந்து போராட முடியாத வாழ்க்கைச் சூழல் இருப்பதாலேயே இந்திய ஜனநாயகப் பெருநாடு இந்த உழவர்களுக்கான சட்டத்தையோ திட்டத்தையோ வகுப்பது இல்லை. அதன் விளைவாகத்தான் அவர்கள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள்.

அடுத்தது கடைசியான சிக்கல் என்னவென்றால் இந்த உழவர்களுடைய உற்பத்திப் பொருளுக்கான சந்தை அவர்கள் கையில் கிடையாது. மற்ற எல்லா பொருளுக்கும் பார்த்தீர்கள் என்றால் சந்தை என்பது மற்றவர் கையில் இருக்கிறது. ஆனால் உழவர்களுக்கு சந்தை கையில் இல்லை, அரசாங்கத் திட்டங்களும் உழவர்களுக்காக இல்லை. அந்த அடிப்படையில்தான் தற்சார்பான ஒரு தொழில்நுட்பத்தை வேண்டுகிறோம். அந்தத் தொழில்நுட்பத்திற்கு அடிப்படை இயற்கை வழி வேளாண்மை. மாடு கையில் இருந்தால் போதும், ஆடு இருந்தால் போதும், சிறிது கோழி இருந்தால் போதும். அதிலிருந்து வரும் கழிவுகளை எவ்வாறு நாம் சிறந்த உரமாக மாற்றுவது, என்ற அந்தத் தொழில் நுட்பத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். அதனடிப்படையில் ஒரே ஒரு மாட்டை வைத்துக்கொண்டு ஐந்து ஏக்கருக்கான உரத்தை எவ்வாறு உற்பத்தி பண்ணுவது என்ற எளிமையான தொழில் நுட்பத்தை சொல்லித் தருகிறோம்.

எடுத்துக்காட்டாக ஒரு மாடு ஒரு நாளைக்கு சராசரியாக பத்து கிலோ சாணம் போடும். அந்த சாணத்தை 1:30 என்ற கணக்கு இருக்கிறது. 1க்கு 30 என்ற கணக்கு இருக்கிறது 1 கிலோ விலங்கு கழிவை சாணம் கோமியத்தை 30 கிலோ தாவரக் கழிவை நீங்கள் மக்கிய உரமாக மாற்றலாம். 1க்கு 30 என்னும் பொழுது 10 கிலோ சாணத்தை ஒரு நாளைக்கு 300 கிலோ தழைகளை நீங்கள் மக்கு உரமாக மாற்றலாம். ஆண்டுக்கு 90,000 கிலோ தழைகளை மக்க வைக்கலாம். அதில் 3ல் 1 பங்கு மக்கு எருவாக நமக்குக் கிடைக்கும் அது 30 டன். ஒரு ஏக்கருக்கு 5 டன் போதுமானது. 30 என்பது நமக்கு உபரியாக இருக்கும். ஒரு ஏக்கர் வைத்துக்கொண்டு 5 டன் பயன்படுத்தினார் என்றால் மீதம் 25 டன்னை சந்தையில் நாம் பண்ணையில் விற்கலாம். அந்த சந்தையின் விலை என்னவென்றால் சராசரியாக 5 ரூபாய்க்குப் போகிறது. கிட்டத்தட்ட 1 ½ லட்சம் ரூபாய் மாட்டுச் சாணத்திலிருந்தே கிடைக்கிறது. கோமியத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ஒரு லிட்டர் கோமியத்தில் 10 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிப்பான் மூலம் தெளித்தீர்கள் என்றால் யூரியா போட வேண்டிய தேவை இல்லை. யூரியா என்ற தலைச்சத்து பார்த்தீர்கள் என்றால் காற்றில் 78 சதவிகிதம் இருக்கிறது.

இந்த பூமி பந்தானது நைட்ரஜன் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு மேல் ஒரு 1700 மூட்டை யூரியா அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த யூரியாவை நாம் பயன்படுத்துவதற்கு சொல்லித்தராமல் கடையிலிருந்து வாங்கிப்போடச் சொல்லி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். காற்றில் இருக்கக்கூடிய தழைச்சத்தான 78 சதவிகிதம் நைட்ரஜனை செடிகளுக்கு ஏற்றமாதிரி எடுத்துத் தருவது மண்ணிலிருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நுண்ணுயிர்கள். ரைசோபியம், அசட்டோ பாக்டா இப்படி பல வகையான நுண்ணுயிர்கள் இருக்கிறது. இந்த நுண்ணுயிர்களை மண்ணில் பெருக்க வைக்கவேண்டும். அதை பெருக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்றால் தாவரக்கழிவையும் விலங்கு கழிவையும் மண்ணில் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அது சேர்ப்பதற்கான தொழில் நுட்பங்களை நாம் சொல்கிறோம். மக்கு செய்தல், பலபயிர் சாகுபடி அதாவது ஒரு ஏக்கரில் 20 கிலோ விதை எடுத்து அதை விதைத்து அதை வளர்த்து அறுபது நாள் கழித்து மடக்கி உழுதுவிட்டீர்கள் என்றால் அந்த நிலம் பஞ்சு போல மாறிவிடும். இதிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள் பெருகும். அந்த நுண்ணுயிர்களை எடுத்துக்கொண்டு அந்த செடி ஆரோக்கியமாக வளரும், நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். இலைவழி ஊட்டமாக, வேர்வழி ஊட்டமாக கொடுப்பதற்கு சாணம், கோமியம், சர்க்கரை, கழிவான மீன்கள், கழிவான கோழிகள் இப்படி எல்லா கழிவுகளையும் பயனுள்ள மக்காக மாற்றுவதற்கும் கரைசலாக மாற்றுவதற்கும் நாம் சொல்லித்தருகிறோம். அந்த அடிப்படையில் தொடர்ந்து உழவர்கள் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை என்பது கடினமான காரியம் கிடையாது, எளிமையான காரியம் அதை புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவை அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. உழவர்கள் நிறைய புதிது புதிதாக நிறைய கண்டுபிடிப்பார்கள்.
  
கேள்வி: தாங்கள் தொடங்கியிருக்கும் அடிசில் சோலை என்ற இந்த இயற்கை விவசாய பண்ணையில் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்து என்னென்ன பயிற்சிகள் கொடுக்கிறீர்கள்?

பதில்: அடிசில் என்றால் உணவு, சோலை என்றால் காடு அல்லது பூங்கா என்று வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் Food Forest என்று சொல்லலாம். இந்த அடிசில் சோலை என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் அடிசில் சோலை என்று பெயர் வைத்தோம். இது தொடங்கி மூன்றாண்டுகளுக்குள் தான் வருகிறது. இருபது ஆண்டுகளாக முள் காடுகளாக இருந்த எந்த விதமான வேளாண்மையும் செய்யப்படாத நிலம். இந்த நிலத்தை எடுத்து முறைப்படுத்தி ஒரு நீடித்த நிலைபெற்ற சாகுபடி என்று சொல்லக்கூடிய முறையை நாங்கள் செயல்படுத்துகிறோம். அங்கு மீன்வளர்ப்பு, கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு, டிம்பர் மரங்கள் இதுதவிர அங்கு இருக்கக்கூடிய பூச்செடிகள் இப்படி ஒருங்கிணைந்த பண்ணையைத்தான் நாங்கள் முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் முழுமையாவதற்கு ஓராண்டுகளாகும். இப்பொழுது ஓரளவிற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எப்படி?, இயற்கை வேளாண்மையில் அடிப்படையான தொழில் நுட்பங்கள் எப்படி?, மக்கு வேகமாக செய்வது?, எப்படி கழிவுகளை கரைசல்களாக மாற்றுவது?, எப்படி மாட்டுக்கோமியத்தை வளமூட்டுவது? இப்படி பல்வேறு விதமான தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி கொடுக்கிறோம். இந்த பயிற்சி மூலமாக நிறைய உழவர்கள் ஆங்காங்கு போய் செய்கிறார்கள். அவர்கள் மறுபடியும் நம்முடன் தொடர்பு கொள்கிறார்கள். இதை எப்படி மேம்படுத்துவது என்று கேட்கிறார்கள். இது ஒரு தொடர்ந்து இயக்கமாக சென்று கொண்டிருக்கிறது.

கேள்வி: இயற்கை விவசாயம் பெருக தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

பதில்: பொதுவாக இயற்கை விவசாயம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இதை நம்முடைய பண்டைய வேளாண்மை முறையிலிருந்து இன்று இருக்கக்கூடிய பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புக் கூறுகளை இணைத்து ஒரு கட்டமாக போவதுதான் நவீன இயற்கை வேளாண்மை Modern Organic Formic என்று சொல்லலாம். பாரம்பரியமான அறிவு நமக்கு அதிகம். ஆறாயிரம் ஆண்டு பழமையான வேளாண்மை முறை நம்மிடம் இருந்தது. இங்கு வந்துதான் எப்படி அணை கட்டவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்டனர். 1863 வரையிலும் ஓடுகிற தண்ணீரில் அணைகட்டத் தெரியாது, கரிகாலன் கட்டிய கல்லணையைப் பார்த்துத்தான் எப்படி அணை கட்டவேண்டும் என்று கற்றுக்கொண்டார்கள். அந்த மாதிரி பல தொழில் நுட்பங்கள் நம்மிடம் இருந்தது. “தொய்யாது வித்திய துளர்படு துடவை” என்று சொல்வார்கள் சங்க ஏற்பாடுகளில் குறிஞ்சி நிலத்தில் சொல்கிறார்கள். தொய்யாது என்றால் உழாது, வித்திய என்றால் விதைத்த, துளர்படு துடவை என்றால் இந்த மாதிரி வயல்கள் இருந்த இடம் குறிஞ்சி நிலம் என்று பதிவு இருக்கிறது நமக்கு. இன்று மசானாஃபுகோகா என்ற ஜப்பான் விஞ்ஞானி ஒன்றும் செய்யா வேளாண்மை (do nothing for me) என்று சொல்கிறார். அந்த வேளாண்மை முறையை நம்முடைய முன்னோர்கள் மிக எளிமையாக செய்திருக்கிறார்கள். அதேபோல் மீனும் நெல்லும் சேர்த்து வளர்க்கிற முறை, தாதறு மன்றங்கள் composed yard அது நம்மிடம் இருந்திருக்கிறது. இந்த மாதிரி பல தொழில் நுட்பங்கள் நம்முடைய முன்னோர்கள் கையில் இருந்தது. அதை நாம் எடுத்துக்கொண்டு இன்றைக்கு இருக்கிற அறிவியல் கூறுகளை இணைத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால் இதன் அடிப்படை என்னவென்றால் தற்சார்பை நோக்கி போவது.

ரசாயன வேளாண்மை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கக்கூடிய அடிப்படை கூறுகள் ரசாயன உரங்கள், வீரிய விதைகள் இவையெல்லாமே ஒரு விவசாயியை தற்சார்பு இல்லாதவனாக மாற்றுவது. இந்த வேளாண்மையின் அடிப்படை கூறுகள் என்றால் தற்சார்பு உள்ளவர்களாக உழவர்களை மாற்றுவது. அதன் மூலமாக அவர்கள் சொந்தக் காலில் நிற்க சொல்லித்தருகிறோம். இதைத்தான் நாங்கள் தாழாண்மை என்று சொல்கிறோம். தாழ் என்பது கால், ஆண்மை என்பது Management தாழாண்மை என்பது சொந்தக் காலில் நிற்பது. தாழாண்மை இல்லாதார் வேளாண்மை வாளாண்மை போலக் கெடும் என்று வள்ளுவர் சொல்கிறார். தற்சார்பு இல்லாமல் ஒருவர் விவசாயம் செய்யப்போவது சண்டைபோடத் தெரியாதவன் வாளெடுத்து சண்டைபோடுவது மாதிரி. எதிரி அந்த வாளைப் பிடுங்கி நம்மை வெட்டிப்போட்டுவிடுவான். அதனால் தாழாண்மையோடு நீங்கள் விவசாயம் செய்யும் பொழுது நாம் வெற்றி ஈட்டலாம்.
-தொடரும்


நன்றி : சிறகு
&
http://www.inneram.com/articles/best-articles/1282-natural-agricultural-scientist-pamayan.html

No comments: