அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, February 3, 2015

இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்: சிறப்பு நேர்காணல் : இரண்டாம் பாகம்
















கேள்வி: சிறுதானியத்தை விளையவைத்து சந்தைப்படுத்துகிறீர்கள், சிறுதானியங்களை விளைவிக்க முக்கிய நோக்கம் என்ன? அதனை பயன்படுத்துவதனால் நமக்கு எந்த மாதிரியான பயன்கள் உண்டாகிறது?

பதில்: சிறுதானியங்கள் என்று சொல்வதை விட இதனை அறுந்தானியம் என்று சொல்லவேண்டும். இதனை ஆங்கிலத்தில் Miner millet என்று சொல்கிறார்கள். மாங்குடி கிழார் என்கிற புலவர் புறநானூற்றில் ஒரு இடத்தில் சொல்கிறார், உணவெல்லாம் எது? தெய்வங்கள் எல்லாம் எது? என்று சொல்லும் போது நடுகற்கள்தான் சிறந்த தெய்வம் என்று இருங்கால் வறகே, கருங்கால் திணை, பொறிகிளார் அவரை என்று முக்கியமாக மூன்றை சொல்கிறார். திணை, வரகு இந்த இரண்டும்தான் சங்க இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் துணையாக குதிரைவாலி, பனிவரகு, சாமை இப்படி சிறிய சிறிய தவசங்கள் நம்மிடம் இருந்தது. இந்த தவசங்களின் சிறப்பு என்னவென்றால் இன்றைக்கு புவி வெப்பமாகிவிட்டது என்று சொல்கிறோம். அதற்கான காரணம் என்னவென்றால் மாசுபாடு அடைந்துவிட்டது, அதிகமான நீரை சுரண்டிவிட்டோம், பெரிய நீராதாரங்கள் எல்லாம் அழிந்துவிட்டது. இதற்கெல்லாம் மாற்று எங்கு உள்ளது என்றால் இந்த சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய அறுந்தானியங்களில்தான்.

 

நெல் விளைவிப்பதை விட சிறுதானியங்களுக்கு கிட்டத்தட்ட 18ல் 1 சதவிகிதம் தண்ணீர் போதுமானது. அதன் பிறகு இவை மானாவாரியாக வந்துவிடும். இதற்கு எந்த விதமான ரசாயனமும் தேவையில்லை, களையெடுப்பது கூட தேவையில்லை. களையெடுக்காமல் கூட சிறுதானியங்களை விளைவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால் குதிரைவாலியில் கோதுமையை விட நார்ச்சத்து ஆறுமடங்கு இருக்கிறது. தினை என்று எடுத்துக்கொண்டால், சோயா பீன்சுக்கு இணையாக தினையில் இருக்கக்கூடிய புரதத்தை சொல்லலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் தேனும் தினையும் முருகனின் படையலாக வைத்தார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு உடம்பில் ஊட்டச்சத்து இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்தியாவில் 46 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் 26 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் நம்முடைய உணவு முறை மாறிவிட்டது.
அதே போல வரகை எடுத்துக்கொண்டால் நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த அறுமருந்தாக வரகுதான் இன்று சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதனாலேயே அதற்கு ஒரு பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் சாமை இதில் குறிப்பாக வெறும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் என்றில்லாமல் நிறைய தாது உப்புக்கள் இருக்கிறது, நிறைய என்சைம்கள் இருக்கிறது, நொதிநீர்கள் இருக்கிறது. இது எல்லாமே உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கக்கூடியது. ஆக தண்ணீர் செலவு குறைவு, சாதாரண விவசாயிகள் உற்பத்தி செய்யலாம், இரண்டாவது இதில் சத்துக்கள் அதிகம், இப்படி எந்த வகையில் பார்த்தாலும் சரி இந்த சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய அறுந்தானியங்கள் மக்களுக்கு மிக மிக ஏற்றது.

 

இந்த சிறுதானியங்கள் 500 ஏக்கர், 1000 ஏக்கர் என்ற பெரும் பண்ணைகளுக்குத் தேவையில்லாதது. சாதாரணமாக 2 ஏக்கர் 1 ஏக்கர் வைத்திருக்கக்கூடிய மானாவாரி விவசாயிகளுக்கு வளமூட்டக்கூடிய ஒரு வகையான தவசம். அந்த அடிப்படையில்தான் இதனை எடுத்து பரப்பவேண்டும் என்று நினைத்தோம். 2007 மற்றும் 2008ல் இதனைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருந்தது தமிழகத்தில். தொடர்ந்து நாம் பத்திரிகையில் எழுதுவது, கூட்டங்கள் போடுவது, விழிப்புணர்வை எற்படுத்துவது இவையெல்லாம் செய்த பிறகு இன்றைக்கு மிகப்பெரிய சந்தை ஏற்பட்டிருக்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் சிறுதானியம் சிறுதானியம் என்கிற பேச்சு அடிபடுகிறது. இதனை வளர்த்ததில் நம்முடைய பங்கு முக்கியமானது அதனை நாம் மறுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் இந்த சிறுதானியங்களைத்தான் வேகமாக எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொல்கிறோம்.

கேள்வி: மரபணு காய்கறிகளும் பழங்களும் பெருகிவிட்ட இந்த சூழலில் இவை மரபணு காய்கறிதான், மரபணு பழம்தான் என்று எப்படி அதனை அடையாளம் கண்டுகொள்வது? அதனை உண்பதால் எவ்வகையான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது?

 

பதில்: மரபணு என்ற சொல்லே தப்பான சொல். என்னவென்றால் மரபீனி அது. ஜீன் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஜீன் என்கிற சொல் தமிழ்ச்சொல் எப்படியென்றால் ய-என்பது ஜ-வாக மாறும், பிரெஞ்சுக்கு போகும் பொழுது கிரேக்கத்திற்குப் போகும் பொழுது மாறும். யீன்றால் பசிகான்பராயினும் யீனுதன் என்றால் இனம் அந்த சொல்தான் அங்கு ஜீனாக மாறியிருக்கிறது. ஈன் என்பதுதான் அந்த சொல். மரபுக் கூறுகளை ஈனுவதால் அதனை மரபீனி என்று சொல்கிறோம். மரபணு என்று சொல்லும் பொழுது ஆட்டமாகிவிடும். அணு என்றால் ஆட்டம், இது வேறு ஜீன் வேறு. இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ஒன்று.

இரண்டாவது இந்த மரபணு மாற்றப் பயிர்கள், மரபணு மாற்ற விதைகள் என்கிற தொழில் நுட்பம் மான்சோன்டா போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதனை ஊக்குவிக்கிறார்கள். ஏனென்றால் இதனுடைய அடிப்படை என்னவென்றால் உலகத்திலேயே மிகப்பெரிய சந்தை உணவுக்கு, அடுத்து இருப்பது விதைதான். இந்த விதைச்சந்தையை நீங்கள் கைப்பற்றிக்கொண்டீர்கள் என்றால் ஒரு நாட்டினுடைய வேளாண்மையைத் தீர்மானிக்கிற அளவிற்கு ஆற்றல் வரும். எடுத்துக்காட்டாக இந்த விதைகளை தன்னுடைய தொழில்நுட்பமாக கையில் வைத்துக்கொண்டு Intellectual Property right என்று ஒன்று இருக்கிறது அதாவது அறிவுச் சொத்துரிமை. அந்த சட்டத்தின் கீழாக யாரும் இந்தத் தொழில் நுட்பத்தைத் தெரிந்துகொள்ளமுடியாது.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் தக்காளி விளைவிக்க வேண்டும், மக்களுக்கு தக்காளி கொடுக்க வேண்டும் என்றால் இந்தத் தக்காளி விதை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்தத் தக்காளி விதையை இந்தியாவிற்குத் தரமாட்டேன் பிரேசிலுக்குத்தான் கொடுப்பேன், பிரேசிலில் தக்காளி விளையட்டும், இந்தியாவில் கத்தரி விளையட்டும் என்று முடிவு செய்தார்கள் என்று அந்த நிறுவனம் நினைத்தால் நடத்தலாம். எனவே நம் விதை இறையாண்மை என்பது நம்மை விட்டு போய்விடும். இந்த மரபீனி மாற்றப்பட்ட விதைகள் எந்த வகையான உடல் நலக்கேடுகளை உருவாக்குகிறது என்பதற்கு பல அறிக்கைகள் வந்திருக்கிறது. இதனை எலிக்குக் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள், அது பல்வேறு நோய்களுக்கு இலக்காகியிருக்கிறது. ஆந்திராவில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட இலைகளை சாப்பிட்ட ஆடுகளுக்கு நோய் வந்திருக்கிறது, அது இறந்தும் போயிருக்கிறது. இதெல்லாம் கணக்கில் எடுக்கவில்லை.

 

இதுவரையில் பொதுவாக எப்படி விதைகளை பரிமாற்றம் செய்கிறோம் என்றால் இதனை கலப்பின விதைகள் என்று சொல்வார்கள். வளமான இடத்தில், தண்ணீர் நிறைய இருக்கக்கூடிய இடங்களிலிருந்து விதையை எடுத்து வருவார்கள், கடுமையான வறட்சியில் விளையக்கூடிய விதைகளை எடுத்து வருவார்கள், இதனை கலப்பினம் செய்து வறட்சியைத் தாங்கக்கூடிய விளைச்சல் அதிகமாகத் தரக்கூடிய விதையை உருவாக்குவார்கள். எடுத்துக்காட்டாக மாமரத்துக்குள்ளேயே நடக்கும் இந்த ஒட்டு, நெல்லுக்குள்ளேயே நடக்கும், ஆனால் Genetic Seeds என்பது BTBacillus thuringiensis என்று சொல்லக்கூடிய நுண்ணுயிரியிலிருந்து எடுக்கக்கூடிய மரபீனியை பருத்திக்குள்ளே செலுத்துகிறார்கள், கத்தரிக்குள் செலுத்துகிறார்கள். இதன் மூலமாக ஒட்டு மொத்த செடியையுமே அவர்கள் நஞ்சாக்குகிறார்கள். அதை சாப்பிடக்கூடிய புழுக்கள் சாகிறது என்று சொல்கிறார்கள். அப்படி அந்தப் புழுக்கள் சாகும் பொழுது அடுத்த கட்டமாக அந்த புழுக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வீரியமிக்கதாக மாறும். எப்படி பூச்சிக்கொல்லிகளை தாங்கு திறன் பெற்றதோ பூச்சிகள் அது போல இந்த மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியையோ கத்திரி செடியையோ தொடர்ந்து சாப்பிடும் பொழுது அந்த பூச்சிகள் தாங்கு திறன் பெற்றுக்கொண்டே வரும். அந்த அடிப்படையில்தான் கிரிஸ்டல் 1 என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள், இப்பொழுது கிரிஸ்டல் 2 என்பதை கொண்டுவந்திருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் மிக வேகமா பூச்சியினுடைய எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பூச்சி எல்லாரையும் சாப்பிட்டுவிடும். நாம் ஆங்கிலத்திரைப்படத்தில் வருவது போல ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நல ரீதியாக நம்முடைய விதை இறையாண்மை ரீதியாக, சூழலியல் ரீதியாக பார்த்தீர்கள் என்றால் எல்லா வகையிலுமே மரபீனி மாற்றப்பட்ட விதைகள் என்பவை மிக மிக ஆபத்தானவை. அதனால்தான் அதை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.

மரபீனி மாற்றப்பட்ட காய்கறிகளையோ பழங்களையோ கண்டுபிடிக்கவும் முடியாது. பெரிய சிக்கல் என்னவென்றால் இரண்டு கத்தரிக்காயும் ஒரே மாதிரிதான் இருக்கும். மரபீனி மாற்றம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியாது. நாம் சாப்பிடுகிற உணவு பாதுகாப்பான உணவா என்பது நமக்கே தெரியாது.

 

இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் பருத்திக்கு மட்டும்தான் அனுமதித்திருக்கிறார்கள். மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் பருத்தியே பார்த்தீர்கள் என்றால் பருத்திப்பால் குடிப்பது, பருத்தி கொட்டையை மாட்டுக்கு வைப்பது இதெல்லாமே உணவுப்பொருட்கள் தான் ஒருவகையில். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பருத்தி என்பது உணவு வகை அல்ல அதனால்தான் நாங்கள் அனுமதித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. அதுவும் ஒரு உணவுப் பயிர்தான் ஒரு வகையில், மறைமுக உணவுப் பயிர்தான். இப்பொழுது கத்தரிக்காய்க்கும் மற்ற உணவுப் பயிருக்கும் நாங்கள் கள ஆய்வுக்கு கதவு திறந்துவிடப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இது மிக மிக ஆபத்தானது. பல ஐரோப்பிய நாடுகளில் இதை தடை செய்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பல நாடுகள் மட்டும்தான் இதை அனுமதித்திருக்கிறார்கள். அதனால் இன்னும் நம்முடைய வேளாண்மையும் நம்முடைய விதையும் பன்னாட்டு நிறுவனம் கையில் போகாமல் இருப்பதற்கு நாம் தொடர்ந்து போராடியாக வேண்டியிருக்கிறது.

கேள்வி: இறுதியாக தமிழக விவசாயிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

 

பதில்: இனிமேல் வழக்கமாக நாம் செய்யும் வேளாண்மை முறை வெற்றி பெறாது. ஏனென்றால் எல்லா வகையிலும் நம்முடைய வேளாண்மையை சிதைத்திருக்கிறார்கள். புதிய பார்வை நமக்கு தேவையிருக்கிறது. குறிப்பாக வேளாண்மை என்பது பருவத்திற்காக மட்டும் (seasonal work)இருக்க முடியாது. ஆண்டு முழுவதும் நமது பண்ணையில் வேலை நடக்க வேண்டும். வெறும் விவசாயமாக இல்லாமல் அதை பண்ணையமாக மாற்றவேண்டும். 365 நாட்களும் தொடர்ந்து நமது பண்ணையில் வேலை நடக்க வேண்டும். ஆடு வளர்க்கவேண்டும், கோழி வளர்க்கவேண்டும், மாடு வைத்துக்கொள்ள வேண்டும், அங்கு இருக்கும் கழிவுகளை மக்கு உரமாக மாற்றவேண்டும், அதை எடுத்து காய்கறிக்குப் போடவேண்டும். விளையும் காய்கறிகளை எடுத்து நீங்களே சந்தைப்படுத்தவேண்டும், சந்தைப் படுத்துவதும் நம் கையில் வரவேண்டும். பெரிய சந்தை நாம் பண்ண முடியாது, அண்டை சந்தைகளை நோக்கி போக வேண்டும். குறிப்பாகப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சிறு விவசாய பண்ணை.

 

ஒரு இளைஞர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வருகிறார் என்றால் ஒரு 2 ஏக்கரோ 3 ஏக்கரோ நிலம் இருக்கிறது என்றால், அந்த 3 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் 25 சென்ட்டில் காய்கறி போட்டுக்கொள்ள வேண்டும். 10 சென்டில் பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ளவேண்டும் அந்த பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மீன் தண்ணீரை எடுத்து கொண்டுவந்து நேரடியாக காய்கறிக்கோ மரப்பயிர்களுக்கோ பாய்ச்ச வேண்டும். 10 ஆடு வைத்துக்கொள்ள வேண்டும், 2 மாடு வைத்துக்கொள்ள வேண்டும், பிறகு 500 கோழி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோழியிலிருந்து மட்டுமே ஆண்டுக்கு 1000 ரூபாய் கிடைக்கும். ஒரு ஆட்டிலிருந்து மாதத்திற்கு 500 ரூபாய் வருமானம் ஈட்டலாம். ஒரு மாட்டிலிருந்து குறைந்த பட்சம் 500 ரூபாய் ஈட்டலாம். இதனை எங்கு கொண்டு போய் விற்பது என்று பார்த்தீர்கள் என்றால் நம்மை நோக்கி வந்துவிடுவார்கள். நாம் பண்ணையை சரியாக கவனித்துக்கொண்டால் வாங்கி சாப்பிடக்கூடிய நம் அண்டை, அயலார்கள் கட்டாயமாக வந்துவிடுவார்கள். முதலில் நம் வீட்டை நோக்கித்தான் உற்பத்தி செய்யவேண்டும். அதன்பிறகு தான் சந்தையை நோக்கி உற்பத்தி செய்யவேண்டும். நமக்கு நம்முடைய நண்பர்களுக்கு நம்முடைய சுற்றத்திற்கு நம்முடைய ஊருக்கு அதன் பிறகுதான் வெளியே. இப்பொழுது இந்த சந்தை முறை அப்படி இல்லை. ஏனென்றால் இந்த உலகமயமாதலின் அடிப்படை என்னவென்றால் எங்கு உற்பத்தியான பொருளும் அங்கு நுகரப்படக்கூடாது. அதாவது நியூயார்க்கில் விளையக்கூடிய ஆப்பிள் நம் திருமங்கலத்தில் விற்கவேண்டும். அதுதான் அவர்களுடைய நோக்கம். அப்பொழுதுதான் வர்த்தகம் நடக்கும். வர்த்தகம் நடந்தால்தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். உலகமயமாதலுக்கு மாற்றாக நாம் சொல்லக்கூடிய உள்ளூர் மயமாதல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். எனவே அதை நோக்கி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்கள் புதிதாக உள்ளே வரவேண்டும். அதற்கான தொழில்நுட்பங்கள் கையில் வசதியாக இருக்கிறது. அதை செய்யவேண்டும்.

 

அரசைப் பொறுத்த வரை அரசு என்ன செய்யவேண்டும் என்றால் இரசாயன உரத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்களோ அதற்கு இணையாக இயற்கை விவசாயத்திற்கும் கொடுக்க வேண்டும். 1 லட்சத்து முப்பதாயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு இரசாயன உரத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கிறார்கள். நாம் என்ன கேட்கிறோம் என்றால் அதற்கு இணையாக இயற்கை வேளாண்மைக்குக் கொடுங்கள். இரண்டையுமே ஓடவிடுங்கள் ஓட்டபந்தயத்தில். எது வெற்றியடைகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இரசாயன விவசாயம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி பேசுவோம், இல்லை இயற்கை வேளாண்மை வெற்றியடைந்தது என்றால் அதை எடுத்துப் பேசுவோம். அது இல்லாமல் இயற்கை வேளாண்மைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் இரசாயன உரத்திற்கே செய்வேன், அதுதான் சிறந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு சரியான போக்கல்ல. அதனால் அரசுகளும் அரசுக்கொள்கைகளை மாற்றவேண்டும். அடுத்த கட்டமாக நுகர்வோர் மத்தியிலும் பெரிய விழிப்புணர்வு வரவேண்டும். என்னவென்றால் நாம் கொடுக்கக்கூடிய பணமானது யார் கைக்குப் போகிறது ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு போகிறதா அல்லது ஒரு சாதாரண உழவருக்குப் போகிறதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் கோலா வாங்கிக் குடிக்கிறீர்கள் அதற்குப் பதிலாக ஒரு இழநீர் வாங்கிக் குடித்தீர்கள் என்றால் அந்த இளநீரை உற்பத்தி செய்கிற விவசாயிக்கு பணம் போகும். ஆனால் கோலா வாங்கிக் குடித்தீர்கள் என்றால் பன்னாட்டு நிறுவனத்திற்கு பணம் போகும். இதை மனதில் வைத்து பார்க்கவேண்டும். நுகர்வோர் மத்தியிலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும், உழவர் மத்தியிலும் விழிப்புணர்வு வரவேண்டும், அரசிடமும் உண்மையான விழிப்புணர்வு வரவேண்டும். அப்படி வந்தால்தான் இதற்கு ஒரு தீர்வாக இருக்க முடியும்.


நன்றி : சிறகு
&
http://www.inneram.com/articles/best-articles/1348-natural-agricultural-scientist-pamayan-2nd-part.html

No comments: